சென்னை: 45 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் 45 வயதுக்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவிக்கொண்டு வருவதால் நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்க தாமதம் இன்றி 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுப்பணித்துறை அலுவலர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கோவிட் நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க அலுவலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த நடைமுறையினை வட்டம் மற்றும் கோட்ட அலுவலகங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் 45 வயதுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை கண்காணித்து அதனை உறுதிப்படுத்தி அலுவலகத்திற்கு விரைவில் அறிக்கை அனுப்ப வேண்டும்.