சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் விரோத சட்டத்தை எதிர்த்து டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த நான்கு மாதங்களாக நெடுஞ்சாலைகளில் அமர்ந்து தொடர் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி தயாராக இல்லை. இந்நிலையில், மத்திய அரசு டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியதால் உரங்களின் விலை மூட்டைக்கு ரூ.700 வரை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.1200க்கு விற்ற டி.ஏ.பி., 50 கிலோ உரம் தற்போது ரூ.1900 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல, ரூ.900க்கு விற்ற காம்ப்ளக்ஸ் உரங்கள் 20:20 ரூ.1,350, ரூ.1,175க்கு விற்ற 10:26:26 உரம் ரூ.1,775, ரூ.900க்கு விற்ற 15:15:15 உரம் ரூ.1,500, ரூ.1,200க்கு விற்ற 12:32:16 உரம் ரூ.1800 என விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.