கோயம்பேட்டில் நாளை சில்லறை வியாபாரிகள் கடைகளை திறக்கலாம்: வணிக வளாக முதன்மை அதிகாரி தகவல்.!!!

சென்னை: கோயம்பேட்டில் நாளை சில்லறை வியாபாரிகள் கடைகளை திறக்கலாம் என்று வணிக வளாக முதன்மை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே மீண்டும் அச்சம் நிலவி வருகிறது.

இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை செய்யப்படுகிறது. கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் செயல்பட தடை. திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும். தேனீர் கடை மற்றும் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை வியாபார கடைகள் செயல்பட தடை செய்யப்பட்டதற்கு எதிரிப்பு தெரிவித்து சில்லறை வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சில்லறை வியாபாரிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கோயம்பேட்டில் நாளை சில்லறை வியாபாரிகள் கடைகளை திறக்கலாம் என்று வணிக வளாக முதன்மை அதிகாரி கோவிந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மீண்டும்  வரும் 12-ம் தேதி திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்றார். இருப்பினும், சில்லறை வியாபாரிகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பதை ஏற்க முடியாது எனக்கூறி சில்லறை வியாபாரிகள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: