காரைக்கால்: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை உள்ளிட்ட விவரங்களை காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி மறைத்ததாக புகார் எழுந்துள்ளது. காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரியாக அர்ஜுன் சர்மா பணியாற்றி வருகிறார். இவர் சில வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க நகைகள் உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக அவர் அறிவிக்கவில்லை என்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு, துணைநிலை ஆளுநர் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த ஆனந்தகுமார் தெரிவித்ததாவது, காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் சரியாக நடக்கவில்லை. இதற்கு முழு காரணம் காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜுன் சர்மா ஆவார்.
சட்டப்பேரவை தேர்தலின் போது பலகோடி ரூபாய் பணம் பிடிபட்டதாகவும், பல சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், பல தங்க நாணயங்கள் பிடிபட்டதாகவும் தகவல் வெளியாகின. தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரி தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. வெளிப்படைத்தன்மை இன்றி ஒளிவு மறைவாகவே காணப்பட்டது என குறிப்பிட்டார்.