தற்போது நேரமில்லை: ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!!

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ராமர் பாலம்:

இந்தியா- இலங்கை இடையே தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடற்பகுதியில் 13  மணல் தீடைகள் உள்ளன. இது ராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என இதிகாசங்களில் கூறப்படுகிறது. இந்த பாலம் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பாலம் வெறும் கற்பனைதான் என்ற வாதமும் இருந்து வருகிறது. இதற்கிடையே, ராமர் பாலம் குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் ராமர் பாலம் 18,400 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது. மேலும் கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போதும் கூட ராமர் பாலம் எந்த சேதமும் அடையவில்லை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு:

இதனிடையே, ராமர் பாலம் இந்துக்களின் அடையாளம், இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாக உள்ளதால், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். கடந்த 2018ம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது. எனினும், வழக்கு விசாரணைக்கு வராமல்  நிலுவையில் இருந்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே முன்பு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த வருடம் ஜனவரி மாதம் முறையிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும்  உச்சநீதிமன்றத்தை அணுகுமாறும் சுப்பிரமணியன் சுவாமிக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு:

இதனிடையே, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தரப்பில் ஒரு புதிய இடைக்கால மனு ஒன்றை கடந்த பிப்ரவர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ராமர் பாலத்தை  தேசிய புராதான சின்னமாக அறிவிக்கக்கூடாது. இது பொதுமக்களின் பயன்பட்டுக்காக கட்டப்பட்டவை கிடையாது. இது காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மணல் திட்டுகள் மட்டுமே ஆகும். இதற்காக பல்வேறு தொல்லியல் ஆய்வு முடிவுகள் இருக்கிறது. இதைத்தவிர ராமர் பாலத்தின் ஒரு பகுதி மட்டுமே இந்திய எல்லைக்குள் உள்ளது. மீதம் உள்ள பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒருவேளை இது தேசிய புராதான சின்னமாக அறிவிக்கப்படும் பட்சத்தில் இந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகள் பாதுக்கப்படும். ஆனால், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்படி பாதுகாக்க இயலும். அதனால் இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

உச்சநீதிமன்றம் மறுப்பு:

தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் கூறியது போல இந்தாண்டு ராமர் பாலம் தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்து ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க கோரினார். ஆனால், இந்த வழக்கை விசாரிக்க காலம் தேவைப்படும். அறிவியல் பூர்வமாக ஆராயப்பட வேண்டும். நம்பிக்கை மற்றும் அடையாளம் என பல்வேறு விவரங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. அதற்கான நேரம் தற்போது இல்லை. என்னென்றால், வரும் 24-ம் தேதியுடன் பதவி முடியவுள்ள காரணத்தினால், மனுவை விசாரிக்கவில்லை. அடுத்து வரும் தலைமை நீதிபதி மனுவை விசாரிப்பது குறித்து முடிவு எடுப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

Related Stories: