சித்தூர் பாலாஜி நகரில் 3 பேருக்கு கொரோனா சுகாதார பணியில் மாநகராட்சியினர் தீவிரம்-தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகோள்

சித்தூர் : சித்தூர் பாலாஜி நகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் சுகாதார பணியில் மாநகராட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்க   தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து, கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், அத்தியாவசிய கடைகள், தொழிற்சாலைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மூடப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டது.

தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் குறையத்தொடங்கியது. இதையடுத்து, படிப்படியதாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. இதையடுத்து, இயற்கையான நிலை திரும்பியது. இந்நிலையில், தற்போது கொரோனா 2வது அலை பரவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. மேலும், கொரோனா 2வது அலை பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று வீடு திரும்பியவர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள் பணியில் ஈடுபடும் போது சானிடைசர் கொண்டு கைகளை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்தநிலையில், ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டது.

அதன்படி, அதிகாரிகளும் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பொதுமக்களின் அலட்சியம் காரணமாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன்படி, சித்தூர் பாலாஜி நகரில் ஒரே நாளில் 3 பேருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாநகராட்சியினர் கொரோனா தொற்று பாதித்தவர்கள் வசித்த பகுதி முழுவதும், கிருமி நாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட சுகாதார பணியில் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: