தமிழக சட்டப்பேரவை தேர்தல்: தோராயமாக 71.79% வாக்குகள் பதிவு: சென்னையில் தான் வாக்குப்பதிவு குறைவு: சத்யபிரதா சாகு பேட்டி..!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 71.79% வாக்குகள் பதிவு ஆகியுள்ளது என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி அளித்துள்ளார். முழுமையான விவரம் நள்ளிரவு 12 மணி அளவில் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவு ஆகியுள்ளன. தமிழகத்தில் நாளை முதல் தேர்தல் பறக்கும் படை சோதனை நடைபெறாது. இன்று தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. மேற்குவங்காளத்தில் 3-வது கட்ட தேர்தலும், அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3-ம் பாலினத்தவர் 7192 பேர் உள்ளனர்.

இன்று காலை 5 மணிக்கெல்லாம் வாக்குச்சாவடி அதிகாரிகள், ஊழியர்கள் வாக்கு மையத்துக்கு வந்து தங்களது இருக்கையில் அமர்ந்தனர். 6 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி பார்க்கப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.  வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காலர்கள் குவியத்தொடங்கினர். கொரோனா பிரச்சினை காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி முககவசம் அணிந்து இருக்கிறார்களா என உறுதி செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். அவ்வாறு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே முககவசம் வழங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே ஆர்வமாக வந்து ஓட்டு போட்டார்கள்.

இதனால் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஓட்டுப்பதிவு தொடங்கியதும் சில வாக்குச்சாவடிகளில் ஓட்டு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் மாற்று எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சட்ட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது. நேரம் நிறைவு பெற்றதால் இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாகு கூறியதாவது; தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 7 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. தேர்தல் நடத்து அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து மண்டல அலுவலருக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், முழுமையான வாகுப்பதிவு சதவீதம் வரவில்லை. தொலைபேசி மூலம் வாங்கிய தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவு ஆகியுள்ளன. என்று கூறினார்.

Related Stories: