சென்னை: சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 11,872 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 வாக்கு சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்கு சாடிகள் எனவும், 1,349 வாக்கு சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகள் என மொத்தம் 1,379 வாக்கு சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் மிகவும் பதற்றம் மற்றும் பதற்றமான வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தினர் உட்பட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்து புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க இணை கமிஷனர்கள் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை கமிஷனர்கள் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கலவரங்கள் ஏதேனும் நடைபெற்றால் அவற்றை தடுக்கும் வகையில் அதிவிரைவுப்படையினர் உஷார் நிலையில் இருக்கும் படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.