தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவை எதிர்த்து வழக்கு: அரசு உத்தரவில் தலையிட ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு மூன்று நபர்களை பரிந்துரைக்க  தேர்வுக்குழு அமைத்து பிறப்பித்த உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக மூன்று பேரின் பெயர்களை பரிந்துரைக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் கமலா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தர்வேஷ் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவை நியமித்து, தமிழக அரசு, கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது.

 இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரபோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், பல்கலைக்கழகத்துடன் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதவர்களையே தேர்வுக் குழுவில் நியமிக்க வேண்டும் என பல்கலைக்கழக விதிகள் உள்ள நிலையில், 2004 முதல் 2007 வரை  துணைவேந்தராக இருந்த தர்வேஷை குழுவில் இணைத்திருப்பது தவறு எனவும், இதனால் துணைவேந்தர் தேர்வு பாரபட்சமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, குறிப்பிட்ட தனி நபரை குழுவில் இணைத்ததற்கு எதிராக மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதால், தேர்வுக் குழு நியமனத்தில் தலையிட எந்த அவசியமும் இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.

Related Stories: