சென்னை: தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். கலைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘தாதாசாஹேப் பால்கே’ விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை நேற்று தனது ட்விட்டரில் அறிவித்தார். இதற்கு முன் இந்த விருதை கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பாலச்சந்தருக்கு பிறகு மூன்றாவதாக நடிகர் ரஜினிகாந்த் இந்த தாதாசாஹேப் பால்கே விருதைப் பெற்றிருக்கிறார்.