சென்னை: தாதா சாகேப் பால்கே விருது அறிவித்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கு நன்றி என நடிகர் ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் வாழ்த்து தெரிவித்த முதல்வர், துணை முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; இந்திய திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என்னில் இருந்த நடிப்பு திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு.சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரை உலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு.பாலசந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.
என்னை மனமார்ந்து வாழ்த்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அவர்களுக்கும், மதிப்பிற்குறிய எதிர்க்கட்சி தலைவர் நண்பர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.