தேர்தலில் தோல்வி அடைந்தால் உயிரை விட்டுவிடுவேன்... கண்ணீருடன் அமைச்சர் விஜயபாஸ்கரின் போஸ்டர் வைரல்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் விஜயபாஸ்கர் அழுவது போன்ற படம் மற்றும் தேர்தலில் தோல்வி அடைந்தால் உயிரை விட்டுவிடுவேன் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் அமைச்சர் கண்ணீர் விட்டு அழுவது போன்றும், தலையை சாய்த்து சோகமாக உட்கார்ந்திருப்பது போன்ற படங்களுடன் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டு கேட்கிறேன்.

தோல்வியடைந்தால் உயிரை விட்டுவிடுவேன். பத்து ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு பகல் பாராமல், ஒவ்வொரு கஷ்ட காலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும்.... முடிவு உங்கள் கையில்.... போன்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்து, இது முற்றிலும் தவறான தகவல் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது: இது முழுக்க முழுக்க தவறான செய்தி. இப்படிப்பட்ட கோழைத்தனமான வார்த்தைகளை எனக்கு சிந்திக்கக்கூடத் தெரியாது. நான் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டவன். இந்த போஸ்டர் செய்தி முற்றிலும் பொய்யானது. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Related Stories: