அதிமுகவின் மாஸ்க்கை அகற்றினால் பாஜக தெரியும்: எந்த தமிழரும் செய்ய விரும்பாததை எடப்பாடி பழனிசாமி செய்கிறார்: பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு...!

சேலம்: தமிழக தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போர் அல்ல என்று சேலம் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றி வருகிறார். எந்த ஒரு மொழியும் பிற மொழிகளை விட உயர்ந்தது அல்ல. 37 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது என தெரிவித்துள்ளார். சேலத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பேசிவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேசியதாவது; தற்போது இருப்பது பழைய அதிமுக இல்லை, இப்போது உள்ளது ஆர்.எஸ்.எஸ் – பாஜகவால் இயக்கப்படும் அதிமுகவே. அதிமுக என்ற முகமூடியுடன் ஆர்.எஸ்.எஸ்-பாஜகதான் தற்போது இயங்குகிறது.

ஒரு தமிழர் கூட மோடி, அமித்ஷா, மோகன் பகவத் காலில் விழ விரும்பவில்லை, அப்படியிருக்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் அப்படி செய்கின்றனர். புலனாய்வுத்துறை மத்திய அரசின் வசம் இருப்பதால்தான், தவறு செய்த தமிழக முதல்வர் தலைகுனிய நேரிடுகிறது. பல்வேறு சிறிய, பெரிய பொருட்களை உருவாக்கி, இந்த நாட்டின் உற்பத்தி தலைநகராக விளங்குவது தமிழகம். இந்த நாடே நீங்கள் அனுமதித்த காரணத்தால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாக பல இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்தனர், அதுபற்றி அதிமுக முதல்வர் பேசவே மாட்டார்.

விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை ஏன் உருவாக்குகிறீர்கள் என்று அதிமுக முதல்வர், பிரதமரிடம் கேள்வி கேட்க மாட்டார். புதிய கல்விக்கொள்கை, நீட் என்று எதை செய்தாலும், தமிழக முதல்வர் கேள்வியே கேட்கமாட்டார். தமிழ் மொழி, கலாசாரம் , பண்பாட்டுக்காக மட்டும் நான் பேசவில்லை. எல்லா மொழிகளுக்குமாக நிற்கிறேன். தமிழர்களின் வரலாறும், பண்பாடும் சிறந்தது, தமிழர்களுக்கு நிகராக யாரும் இருக்க முடியாது என்பதை உணரலாம். தமிழ் கலாச்சாரம், மொழி, வரலாற்றின் மீது முழுமையான தாக்குதலை சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இந்த தாக்குதலை முறியடிப்பதற்கான தேர்தல் இது” என தெரிவித்தார்.

Related Stories: