ஊட்டி தமிழகம் மாளிகை பூங்காவில் பூத்துக்குலுங்கும் ‘சிம்பிடியம்’: சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பு

ஊட்டி: ஊட்டி தமிழகம் மாளிகையில் உள்ள பூங்காவில் ‘சிம்பிடியம்’ வகை ஆர்கிட் மலர்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான ஆர்கிட் மலர்கள் காணப்படுகிறது. ‘ஆர்கிடேசி’ என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த பூக்கும் தாவரங்களான இவை, தாவர குடும்பங்களிலேயே இரண்டாவது மிகப்பெரியவை. மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வடகிழக்கு இந்திய பகுதிகளிலும் இயற்கையாக காணப்படுகிறது. அதில், 763 பேரினங்களும், 28 ஆயிரம் சிற்றினங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இம்மலர்கள் பூத்த பின்னர் பல நாட்கள் வாடாமல் இருக்கும்.

ஆர்க்கிட் வனப்பகுதிகளில் காணப்படுவது மட்டுமின்றி, நாடுகாணி ஜீன்பூல் தாவரவியல் மையம், ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதி, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது மட்டுமின்றி ஆய்வுக்கு வரும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கும் உதவியாக உள்ளது. இதனிடையே, ஊட்டி தமிழகம் அரசு ஆய்வு மாளிகை வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தொட்டியில் நடவு செய்யப்பட்டுள்ள சிம்பிடியம் வகை ஆர்கிட் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை அங்கு வர கூடிய பார்வையாளர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Related Stories: