களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் கருட சேவை விழா

களக்காடு: களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை விழா நடந்தது. களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 20ம்தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினசரி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருவிழாவின் 5ம் நாளன்று சிறப்பு நிகழ்ச்சியாக கருட சேவை நடந்தது. இதனை முன்னிட்டு வரதராஜபெருமாள், வெங்கடாஜலபதி மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

அதனைதொடர்ந்து வரதராஜபெருமாளும், வெங்கடாஜலபதி சுவாமிகளும் விஷேச அலங்காரத்தில் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் 7ம் திருநாளான நாளை 26ம்தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபவம் இடம்பெறுகிறது. 8ம் நாளான 27ம்தேதி இரவில் வரதராஜபெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10ம் நாளான 29ம்தேதி நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: