சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி, அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி திருவீதியுலா காட்சி நடைபெற்றது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்தாண்டு பங்குனி திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் 2வது நாள் சூரிய வட்டம், சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடந்தது. தொடர்ந்து 3வது நாளான நேற்று அதிகார நந்தி வாகனத்தில், கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் சர்வ அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் திருவீதியுலா வந்தார். அதிகார நந்தி வாகனத்தை பின் தொடர்ந்து, கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்விடை வாகனங்களில் பரிவார தேவதைகள் உடன் வந்தனர். தொடர்ந்து திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா நடந்தது. இதில், பக்தர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.