பெற்றோரை தாக்கியதை கண்டித்து குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவாரூர்: பெற்றோரை தாக்கியதை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் காவனூர் ஊராட்சி சூரணூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான் மகள் தங்கம்(25). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்வம் மகன் லட்சுமிராஜன்(30). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாமல் நீண்டகாலமாக உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது இவர்களுக்கு 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் லட்சுமிராஜன் அந்த குழந்தை தன்னுடையது இல்லை என கூறி வந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தையின் தந்தை லட்சுமிராஜன் என தெரிய வந்த பிறகும் அவர் மறுத்து வந்தார்.

இந்நிலையில் லட்சுமிராஜனுக்கு வேறொரு பெண் பார்க்க உள்ளதை அறிந்த தங்கம் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு இரு தினங்களுக்கு முன்னர் லட்சுமிராஜனிடம் முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமிராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கம் மற்றும் அவரது பெற்றோரை தாக்கியுள்ளனர்.இதில் காயமடைந்த அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடம் இதுவரை போலீசார் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தங்கம் தனது குழந்தையுடன் திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை சமாதானப்படுத்தி கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: