சென்னை: போலி அறிவிப்புகள் மூலம் மக்களை மதி மயக்கி ஏமாற்ற முயற்சிக்கும் அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவது உறுதி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு அரசியல் களத்தில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து கொண்டு போலி அறிவிப்புகள் மூலம் மக்களை மயக்கி அதிமுக கூட்டணி ஏமாற்ற முயற்சிப்பதாக சாடினார்.