தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிப்பு-பொதுமக்கள் கடும் அவதி

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஜனவரி மாதம் வரை மழை பெய்தது. கார்த்திகை மாதத்தை தாண்டி மார்கழி மாதத்திலும் மழை கொட்டித் தீர்த்ததால், அறுவடை பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது. இந்நிலையில், மத்திய மாவட்டமான தர்மபுரி பகுதியிலும் நல்ல மழை பெய்தது.

தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு பகுதியில் காவிரி ஆறு பாய்ந்தாலும், விவசாயத்திற்கு பயன்படாத நிலையே காணப்படுகிறது. இதனால், பெரும்பாலான நிலப்பகுதி வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் கோடைக்கு முன்பாகவே வெயிலின் அளவு படிப்படியாக அதிகரித்தது.

தர்மபுரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், கடந்த மாத இறுதியில் அதிகபட்சமாக 96 டிகிரி பாரன்ஹீட்டாக வெயில் போட்டு தாக்கியது. அடுத்தடுத்த நாட்களில் அதே அளவில் சுட்டெரித்த நிலையில், கடந்த 7ம் தேதி 97 டிகிரி பாரன்ஹீட்டானது. நேற்றைய நிலவரப்படி வெயில் அளவு 95 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. இந்நிலையில், இன்று 95 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டையை பிளக்கும் வெயிலுக்கு பயந்து, பொதுமக்கள் நண்பகல் வேளையில் வெளியில் வர பயந்து, வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை காணப்படுகிறது. இதனால், மதிய நேரத்தில் முக்கிய சாலை சந்திப்புகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Related Stories: