சென்னை: சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொளத்தூர் வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு அதிமுக சார்பில் ஆதிராஜாராம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கொளத்தூர் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர். தென்சென்னை பகுதியைச் சேர்ந்தவர். எனவே இவரை மாற்றக்கோரி கொளத்தூரில் பலரும் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வேட்பாளரும் விருப்பமின்றி இந்த தொகுதியில் போட்டியிடுவதாக தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதை மையமாக வைத்து ஆயிரம்விளக்கு தொகுதி கேட்டவருக்கு கொளத்தூர் ஒதுக்கியதால் அதிமுக வேட்பாளர் அதிர்ச்சி என்ற தலைப்பில் தகவல்கள் வெளியானது. இதனை நேற்று கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளைச் சேர்ந்த அதிமுகவினர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு உடனடியாக கொளத்தூர் தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தங்களது பதிவுகளை அதிமுகவின் முக்கிய தலைவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.