குன்னூர் அருகே சந்திரா காலனியில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் நீரோடையில் மண் சரிவு

குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் நீர் ஓடைகள், சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக குன்னூர் பகுதியில் அதிகளவில் விதி மீறிய கட்டிடங்கள் மற்றும் ஆக்ரமிப்பு என அதிகரித்து வருகிறது. அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது, தேயிலை தோட்டங்களை அழித்து சாலை அமைப்பது மற்றும் நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் காட்டேஜ்கள் கட்டும் பணிகள் பெருமளவில் நடைபெற்று வருகிறது.

ஆற்றினை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதால் மழை காலங்களில் வெள்ள நீர் வரத்து அதிகரித்து பேரிடர் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் குன்னூர் அருகே சந்திரா காலனி பகுதியில் நீரோடையின் குறுக்கே கட்டிடம் கட்டியுள்ளனர். மேலும் ஜேசிபி கொண்டு மண் அகற்றி வருகின்றனர். நேற்று பெய்த கனமழையில் மண் நீரோடையில் நிறைந்து தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. வருவாய்த்துறையினர் இந்த பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு நீரோடையை மீட்டு தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: