ஊட்டி: கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் துவங்கியது. ஆண்டு தோறும் மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்துவது வழக்கம். கோடையை கொண்டாட இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியில் பூத்து குலுங்கும் பல லட்சம் வண்ண மயமான மலர்கள், தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் மலர் அலங்காரங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதனால், ஆண்டிற்கு ஆண்டு கோடையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், வரும் மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சி என அனைத்தையும் சிறப்பாக நடத்த தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.