சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் விதிமுறைகளை மீறி பிரசார பேனர், போஸ்டர், சின்னம் வரைவது மற்றும் நிர்ணயித்த கால அளவை விட அதிக நேரம் பேசுவது உள்பட பல்வேறு விதிமீறல்களை கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மாநகர போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களுக்கு ஒரு தனிப்படை வீதம் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்கும் துணை கமிஷனர் தலைமையில் இந்த 12 தனிப்படைகள் இயங்கும் என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகள் நடத்து பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரம் செய்யும் பகுதிகளில் இந்த தனிப்படைகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.