சென்னையில் விதி மீறல்களை கண்காணிக்க 12 தனிப்படைகள் அமைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் விதிமுறைகளை மீறி பிரசார பேனர், போஸ்டர், சின்னம் வரைவது மற்றும் நிர்ணயித்த கால அளவை விட அதிக நேரம் பேசுவது  உள்பட பல்வேறு விதிமீறல்களை கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மாநகர போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மாநகர காவல் எல்லையில் உள்ள 12  காவல் மாவட்டங்களுக்கு ஒரு தனிப்படை வீதம் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்கும் துணை கமிஷனர் தலைமையில் இந்த 12 தனிப்படைகள்  இயங்கும் என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகள் நடத்து பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரம் செய்யும் பகுதிகளில் இந்த தனிப்படைகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

இந்த தனிப்படையுடன் தேர்தல் அதிகாரி ஒருவரும் உடன் இருப்பார். தேர்தல் விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது தனிப்படையினர் அளிக்கும் அறிக்கையின் படி சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளிப்பார்.  அதன்படி போலீசார் விதிகளை மீறிய அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது  வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த ஒரு வாரத்தில் சென்னை மாநகரில் தேர்தல் விதிகளை மீறியதாக 18 வழக்குகள் பதிவு  செய்துள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: