நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் புகார்!: யார் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் ஆரம்பகட்ட விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி.க்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் முறைகேடு நடந்ததது தொடர்பான புகாரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்து முடிந்த பின் அக்டோபர் மாதம் 5ம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது. அக்டோபர் 8-16ம் தேதி வரை 700க்கு 594 மதிப்பெண் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17ம் தேதி திடீரென தன்னுடைய மதிப்பெண் 248 ஆக குறைத்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறி கோவையை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கூகுள் கணக்கில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட தரவுகள் மற்றும் அக்டோபர் 11, 12ம் தேதிகளில் 594 மதிப்பெண்கள் என காட்டிய புகைப்படத்தையும் மாணவர் தரப்பில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையதளத்தின் மூலம் நீட் மதிப்பெண்களை திருத்த முடியும் என்று வாதத்திற்காக கூறினார். எண்ணற்ற மாணவர்களை இதை செய்திருக்க கூடும் என்றார். தேசிய தேர்வு முகமை குளறுபடியால் மாணவர் பலிகடா ஆகி உள்ளதாகவும் அவர் வாதிட்டிருந்தார். அச்சமயம் இந்த வழக்கில் சைபர் குற்றங்களை கண்டறிய நிபுணத்துவம் பெற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா? என்றும் நீதிபதி கேள்வி முன்வைத்திருந்தார். ஆனால் அதற்கான அவசியம் ஏதும் இல்லை என தெரிவித்த மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலமும் தன் பங்கிற்கு அவர்கள் பிரதிநிதிகளை நியமித்துக்கொள்வார் எனவும் தேசிய தகவலறியும் மையம் விசாரிப்பதே சுதந்திரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேசிய தேர்வு முகமை சார்பில் குற்றச்சாட்டின் அடிப்படையில் முகாந்திரம் இருப்பதினால் மட்டுமே சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட முடியும் எனவும் இந்த வழக்கில் அத்தகைய முகாந்திரம் இல்லை எனவும் வாதிடப்பட்டது. தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வெங்கடேஷ், சைபர் கிரைம் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டார். யார் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் ஆரம்பகட்ட விசாரணை மட்டும் மேற்கொண்டு 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories: