வீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமம் அருந்ததியர்புரத்தில் வசிக்கும் சீனிவாசன் மனைவி வேளாங்கண்ணி தலைமையில் 52 குடும்பத்தினர் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு: கீழச்சேரி கிராமம் அருந்ததியர்புரத்தில் 52 குடும்பங்களை சேர்ந்தோர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் தினமும் தினக்கூலி செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களால் தனியார்  நிலத்திற்கு பணம் கொடுத்து வீட்டு மனைகளை வாங்கி வீடு கட்டும் அளவிற்கு வசதி, வாய்ப்புகள் இல்லை. ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்களாக ஒன்றாக சேர்ந்து இட நெருக்கடியில் வசித்து வருகிறோம். எங்களது பிள்ளைகள் படிக்க வசதி  இன்றியும் அவதியுற்று வருகின்றனர். எனவே தாங்கள் எங்கள் மீது கருணை கொண்டு எங்களது குழந்தைகளின் நலன் கருதியும் வாழ்வதற்கு இலவச வீட்டுமனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: