திருப்போரூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால், திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. பேனர்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலராக கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று காலை தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் மண்டல தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், வட்டாட்சியர், கூடுதல் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன், சட்டமன்ற தேர்தலில் அதிகாரிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் மின்விளக்கு, குடிநீர், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம், நாற்காலிகள், வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்து 3ம் தேதிக்குள் அதனை சரி செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார். தேர்தல் நடத்தை விதிகள் அமலானதையொட்டி நேற்று மாலை திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. திருப்போரூர் வட்டாட்சியர் ரஞ்சனி, எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார். உடன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜீவிதா, துணை வட்டாட்சியர் சத்யா, திருப்போரூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி ஆகியோர் இருந்தனர். அதேபோல் திருப்போரூர் பேரூராட்சியில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சிகள், சாதி அமைப்புகளின் போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. திருப்போரூர் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் இப்பணியை மேற்கொண்டனர்.
417 வாக்குச்சாவடிகள் திருப்போரூர் தொகுதியில் இதுவரை 307 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது கூடுதலாக 110 வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது.