சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது மார்ச் 15 வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் நியமனம் செய்தது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க கோரி துணைவேந்தர் சூரப்பா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2018 ஆம் ஆண்டு துணை வேந்தராக நியமிக்கப்பட்டதில் இருந்து 2020 வரை எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்றும், தமிழக அரசு பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தது, அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக அறிவிப்பதற்கான முயற்சி ஆகியவற்றில் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடுகள் காரணமாக சூரப்பா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.