சென்னை: அண்டை மாநிலங்களில் 2-ம் அலை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் 2-ம் அலை கொரோனா அதிகரித்து வருகிறது. இருந்தாலும், தமிழகத்தில் மக்கள் அலட்சியமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது என கூறினார். 2-ம் அலை தமிழகத்தில் பரவாமல் தடுக்க, தமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், கேரளா-தமிழக எல்லைகளில் மட்டும் 26 இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் சோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.