தொடங்கியது போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்: 9 தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழக அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று முதல் நடைபெறும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு சென்னையில் அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை, உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அரசு பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்துகள் வழக்கதை விட சற்று குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் பஸ் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை பல்லவன் சாலையில் பணிமனையில் அதிமுக-வின் தொழிலாளர் சங்கத்தினர் மட்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் குறைவான பேருந்துக்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில், திருச்சியில் பேருந்துக்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டன. மயிலாடுதுறை, திருப்பூர், ராஜபாளையம், கடலூர், ஈரோடு, உளுந்தூர்பேட்டை, நெல்லையில் பேருந்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

Related Stories: