நிலக்கரி இறக்குமதி விவகாரம் ரூ.1,330 கோடி டெண்டருக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: இந்திய வர்த்தக புத்தகத்தில் வெளியிட உத்தரவு

சென்னை: சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம் 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பு, கடந்த ஜனவரி 18ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணையதளம் மூலம் வெளியிட்டது. டெண்டர் நேற்று நடைபெற இருந்த நிலையில் இதற்கு தடை விதிக்க கோரி தூத்துக்குடி தனியார் நிலக்கரி நிறுவனத்தை சேர்ந்த திருமலைச்சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் வாதிடும்போது, 2 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க குறைந்தபட்சம் 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று டெண்டர் வெளிப்படை சட்டத்தில் விதி உள்ளது.

ஆனால் 1,330 கோடி மதிப்பிலான இந்த டெண்டருக்கு 15 நாட்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதில் டெண்டர் எடுக்கும் வகையில தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விதிகளை மாற்றியுள்ளது என்று வாதிட்டார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள காரணத்தினால் டெண்டருக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில், டெண்டருக்கான கால அவகாசம் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, டெண்டருக்கு தடை விதிக்க முடியாது. டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இந்திய வர்த்தக புத்தகத்தில் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: