தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது ரொக்கமாக ரூ.15 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும்: ஐகோர்ட்டில் ஒப்பந்ததாரர்கள் வழக்கு; இன்று விசாரணை

சென்னை: 2019 மக்களவை தேர்தலின்போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்ல கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால், எதிர்வர உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, நடத்தை விதிகள் அமலுக்கு வரும் போது, அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க கோரி, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அரசுத்துறை பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களிடம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இப்பணியாளர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது.

அதற்காக குறைந்தது 2 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், பணத்தை கொண்டு செல்ல முடியாது என்பதால், 2 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளோம். இந்த மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: