பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும்..! நிர்மலா சீதாராமன் விளக்கம்

சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன என விலை உயர்வு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர ஜி.எஸ்.டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே; என்னால் மட்டும் முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது; தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு ஒரு எம்பி கூட இல்லை. இருந்தாலும், தமிழகத்திற்கு எவ்வித குறையும் இல்லாமல் பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 -இல் பிரதமர் பதவி ஏற்றவுடன் இலங்கையில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்று தவித்து வந்த 5 மீனவர்களுக்காக நம் பிரதமர் இலங்கை அரசிடம் பேசி அவர்களை நாட்டுக்கு கூட்டி வந்து குடும்பத்துடன் சேர்த்தார்.

அது போல தமிழகத்திற்கு ஒவ்வொரு துறைக்கும் ஏதோ ஒரு விதத்தில் மத்திய பட்ஜெட்டில் இருந்து நிதி உதவியை நீட்டித்து தான் இருக்கிறோம். பிரதமர் தமிழகத்திற்கான தேவைகளை குறையின்றி நிறைவேற்றி வருகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதால் எனக்கு தர்மசங்கடமாகத்தான் உள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும். என்ன நம்ம நாடு இப்படி இருக்கே என சொல்வதை விட்டால் தான் நாம் உருப்படுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: