சாம்பார் சாதம் சாப்பிட்ட போலீஸ் ஏட்டுவின் மனைவியும் பலி

ஆவடி: ஆவடி அடுத்த மிட்டனமல்லி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வர்க்கீஸ்(53). ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெர்சம்மாள்(51). இவர்களுக்கு  அமிர்தஜான்(24). என்ற மகனும், ஆஸ்பி(21) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், 16ம் தேதி மதியம் வர்க்கீஸ் தனது மனைவி, மகனுடன் வீட்டில் சாம்பார் சாதத்துடன், பீன்ஸ், கேரட் பொறியல் சாப்பிட்டுள்ளார். மேலும், மகள் ஆஸ்பி, உடல் நலக்குறைவு காரணமாக சாம்பார் சாதம் சாப்பிடவில்லை. அதற்கு பதிலாக, தயிர்சாதம் சாப்பிட்டுள்ளார். மாலை மூவரும் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதனை பார்த்த, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி வர்கீஸ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெர்ஸம்மாளும் நேற்று அதிகாலை இறந்தார்.  இதற்கிடையில், அவர்களது மகன் அமிர்தஜனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின்பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உணவில் நச்சுத்தன்மை ஏற்பட்டு வர்கீஸ், ஜெர்ஸம்மாள் ஆகியோர் இறந்தனரா அல்லது அவர்கள் இருவரும் விஷம் வைத்து கொல்லப்பட்டனரா என பல்ேவறு கோணங்களில் விசாரிக்கின்றனர். மேலும், இது தொடர்பாக ஆஸ்பியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: