திருமலை: ஆந்திராவில் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்திய வழக்கில் இளவரசியின் சம்பந்தி, குண்டர் சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் இளவரசி. இவரது சம்பந்தி பாஸ்கரன். இவர் மீது ஆந்திராவில் செம்மரக்கடத்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் உள்ளன. சில வாரங்களுக்கு முன்பு அவரை ஆந்திர போலீசார் சென்னையில் கைது செய்தனர். தற்போது, அவரை கடப்பாவில் உள்ள மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடப்பா கலெக்டர் அரிகிரணுக்கு, எஸ்பி அன்புராஜன் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை கலெக்டர் ஏற்றதையடுத்து நேற்று முன்தினம் சிறைக்கு சென்று பாஸ்கரனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவண நகலை எஸ்பி அன்புராஜன் வழங்கினார்.