வேளாங்கண்ணி அருகே பரபரப்பு: வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

நாகை: வேளாங்கண்ணி அருகே  வானிலிருந்து மர்ம பொருள் பறந்து வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வடுகச்சேரி கிராமத்தில் நேற்று மதியம் வானிலிருந்து மர்ம பொருள் வந்து விழுந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் வேளாங்கண்ணி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பொருளை பரிசோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வானில் இருந்து பறந்து வந்து விழுந்த மர்ம பொருள் விமானங்களில் அவசர காலத்தில் பயணிகளை பாதுகாக்க பயன்படுத்தப்படும் பாராசூட் என தெரிய வந்துள்ளது. இந்த பாராசூட் காவல்நிலையத்தில்  வைக்கப்பட்டுள்ளது. இது எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். நாகை மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே இது போல் மர்ம பொருள்கள் கரை ஒதுங்குவதும், வானில் இருந்து விழுவதையும் கண்டு கடலோர பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related Stories: