சென்னை: மதுரவாயலில் உறைகிணற்றில் சேர்ந்த கழிவுநீர் அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை மதுரவாயல் அருகே அஷ்டலட்சுமி நகர் என்ற பகுதியில் வசிப்பவர் நித்யா. இவர் வீட்டில் சுமார் 30 அடி ஆழத்தில் உறைகிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை ரவி, காசி என்ற இருவர் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயம் ரவி என்பவர் கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானார். இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த ரவி மருத்துவமனை அழைத்து செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார்.