கரூர்: கரூர் அருகே திருமணம் செய்த காதல் ஜோடி விஷம் குடித்த நிலையில் காதலன் இறந்தார். காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை கன்னிமெய்க்கான்பட்டியை சேர்ந்தவர் அஜித்(17). கூலித்தொழிலாளி. பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படிக்கும் ஜெயராமன் மகள் சிவரஞ்சினி(19) என்பவரை கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவருக்கு திருமண ஏற்பாடுகளும் மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதலர்கள் இருவரும் நேற்று காலை கரூர் மாவட்டம் மணவாடி அடுத்துள்ள கத்தாளப்பட்டி பகுதிக்கு வந்தனர். அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து மாணவிக்கு காதலன் தாலி கட்டியதாக கூறப்படுகிறது. இருவரும் அங்கிருந்து கத்தாளப்பட்டி காட்டுப்பகுதிக்கு சென்றனர்.