தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உயிருக்கு குறி? பீகார், பஞ்சாபில் இருந்து ஆயுதங்கள் சப்ளை: கைதான 2 தீவிரவாதிகளின் பகீர் வாக்குமூலம்

புதுடெல்லி:தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட தீவிரவாதிகளிடம் வீடியோ கைப்பற்றப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக 2 தீவிரவாதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6ம் தேதி பாகிஸ்தானின் லஷ்கர்-இ-முஸ்தபா (எல்இஎம்) அமைப்பைச் சேர்ந்த இதாயத்துல்லா மல்லீக் என்பவன் டெல்லி போலீசில் சிக்கினான். அவனிடம் நடத்திய விசாரணையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் (75)  மீது தாக்குதல் நடத்துவதற்காக, பாகிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதற்காக வியூகம் அமைக்க, தேசிய பாதுகாப்பு ஆலோசக அலுவலகம் அமைந்த பகுதியின் படக்காட்சிகள் அடங்கிய வீடியோ அவனிடம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத் தலைவர் தில்பாக் சிங் கூறுகையில்,  ‘ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் குழு, டெல்லி மீது தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் அலுவலகத்தின் படக்காட்சிகளுடன் சிக்கிய தீவிரவாதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த  சதி திட்டம் தெரியவந்துள்ளது.

காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள், பீகாரில் இருந்து வெடிபொருள் ஆயுதங்களை சேகரித்து வருகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ய, பஞ்சாபில் படிக்கும் சில காஷ்மீர்  மாணவர்களை பயன்படுத்துகின்றனர்.

இவ்விவகாரத்தில் கடந்த 6ம் தேதி லஷ்கர்-இ-முஸ்தபா (எல்இஎம்) தீவிரவாதி இதாயதுல்லா மாலீக்கும், கடந்த 13ம் தேதி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) தீவிரவாதி ஜாரூர் அகமது ராதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில்  செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய இரு தீவிரவாத குழுக்கள், காஷ்மீரில் செயல்படுவதற்காக எல்இஎம் மற்றும் டிஆர்எஃப் என்ற பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன’ என்றார்.

Related Stories: