காதலர் தினத்தையொட்டி ஏலகிரியில் குவிந்த புதுமண தம்பதிகள்

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காதலர் தினமான நேற்று சுற்றுப்புற பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக ஏலகிரி மலையில் குவிந்தனர். மேலும் பல்வேறு பகுதியை சார்ந்த இளஞ்ஜோடிகள் சிலர் பைக்கில் சவாரி செய்து ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் போலீசிடம் தப்பிக்க ஏதோ ஒரு பொய்யை சொல்லி அங்கிருந்து தப்பித்து ஒரு வழியாக ஏலகிரி மலையை வந்தனர்.

அப்போது மலைச்சாலையில் பார்வை மையம் பகுதிகளிலும் கண்ணுக்கு மறைவான பகுதியிலும் தனிமையில் அமர்ந்து பேசி மகிழ்ந்தும், ஒரு சிலர் ஏலகிரி மலைக்கு வந்து இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு களித்தும் இருள் சூழ்ந்த பின்னர் அவர்களது வீட்டிற்கு சென்றனர். மேலும் திருமணமான புதிய தம்பதிகள் முதல், காதல் ஜோடிகள் வரை அதிகம் பேர் கார் மற்றும் பைக் சவாரி மேற்கொண்டு ஏலகிரி மலைக்கு வந்து பல்வேறு இடங்களை கண்டுகளித்தனர்.

மேலும், படகில் சவாரி செய்தும், பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதுபோன்று பல்வேறு தரப்பட்ட தம்பதிகள் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் என அனைவரும் நேற்று ஏலகிரி மலையில் குவிந்ததால் ஏலகிரி மலை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக தென்பட்டது.

Related Stories: