தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு; சென்னையில் ரூ.91-ஐ தாண்டியது: மத்திய அரசின் நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் கொந்தளிப்பு

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.90.96 காசுகளாகவும், டீசல் ரூ.84.16 காசுகளாகவும், இருந்தது. இன்று அதன் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.91.19-க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.84.16-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கொதிப்படைந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் பெட்ரோலின் விலை 93 ரூபாயை தாண்டியுள்ளது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று மேலும் 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93. 42க்கு விற்பனையாகிறது. இதே போன்று டீசல் லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து 86.33 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் மே மாதம் வரை பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. கொரோனா பீதி சற்று குறைந்ததை அடுத்து கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் காசுகள் கணக்கில் உயர்த்தி வருகின்றன.

இன்னும் சில நாட்களில் ஒரு லிட்டர் 100 ரூபாயை தொட்டு விடும் அபாயம் இருப்பதால் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

Related Stories: