திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருமழிசை குண்டுமேடு எட்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி(46). திருமழிசை மற்றும் குண்டுமேடு பகுதிகளில் உள்ள நபர்களிடம் தீபாவளி பண்டு சீட்டு நடத்துவதாக கூறி உள்ளார். இதைதொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 28 பேர் ரூ.68 லட்சம் வரை பணம் கட்டியிருந்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட ஈஸ்வரி அவர் தெரிவித்ததுபோல் பண்டு பொருட்களை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் பணம் செலுத்தியவர்கள் பலமுறை ஈஸ்வரியிடம் கேட்டபோது அவர் எந்த பதிலும் சொல்லாமல் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அரவிந்தன் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குணசேகரன், எஸ்.ஐ., சுசிலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் தலைமறைவாக இருந்த ஈஸ்வரியை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.