உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: இதுவரை 50 பேர் சடலங்களாக மீட்பு..! ன்னும் 154 பேரை கண்டறிய முடியவில்லை: மாநில அரசு தகவல்

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் இன்னும் 154 பேரை கண்டறிய முடியவில்லை மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல், நீர்மின் நிலையங்கள் பெருத்த சேதம் அடைந்தன. தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் மூடிக்கொண்டது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களையும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்கும் பணி, இன்று 8-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 50 பேர்களின் உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 154 பேரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை என்று உத்தரகாண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரெய்னி கிராமம் மற்றும் தபோவன் சுரங்கப்பாதையில் தலா 6 சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீட்புப் பணி முழு வீச்சில் நடைபெறுவதாக சாமோலி மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த துணை கமாண்டன்ட் ஆதித்யா பிரதாப் சிங் கூறியுள்ளார்.  தொடர்நது அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Stories: