பகல் நேரங்களில் வெயில் வாட்டியெடுப்பதால் ஊட்டியில் குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதால்  மோர், ஜூஸ், நொங்கு மற்றும் குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

நீலகிரியில்  கடந்த சில ஆண்டுகளாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பிப்ரவரி மாதம் துவக்கம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியில் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருந்தாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது.

பொதுவாக மோர் மற்றும் ஜூஸ் போன்ற குளிர்பானங்களை குடிக்க மக்கள் தயக்கம் காட்டுவார்கள். எப்போதுமே இங்கு குளிரான காலநிலை இருக்கும் என்பதால், எளிதல் சளி அல்ல காய்ச்சல் தொற்றிக்கொள்ளும்.

ஆனால் தற்போது பகல் நேரங்களில் வெயில் வாட்டியெடுப்பதால் குளிர்பானங்கள், பழரசம், இளநீர், நொங்கு மற்றும் மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களை குடிப்பதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பெரும்பாலான ஓட்டல்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் தற்போது மோர் மற்றும் குளிர்பானங்கள் அதிகளவு விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். அதேபோல், பழரசம் மற்றும் இளநீர் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சாலையோரங்களில் நொங்கு போன்றவைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘தற்போது பகல் ேநரங்களில் வெயில் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான மக்கள் டீ மற்றும் காபி போன்றவைகளை குடிக்க ஆர்வம் காட்டுவதில்லை.

அதே சமயம் மோர், ஐஸ் கிரீம், தயிர் வடை மற்றும் புரூட் ஜூஸ் போன்றவைகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். நாங்களும் மக்கள் விருப்பத்திற்கு ஏற்பட பகல் நேரங்களில் ஜூஸ், மோர், தயிர் வடை போன்ற குளிர்ச்சியான உணவு பொருட்கள் மற்றும் பானங்களை விற்பனை செய்கிறோம். தற்போது இவைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. வெயில் அதிகரிக்க, அதிகரிக்க இது போன்ற பொருட்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும்’’ என்றனர்.

Related Stories: