பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்திச் சென்ற ரூ. 1 லட்சம் மதிப்பிலான கடல் பூச்சிகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை கைது செய்தனர். மீஞ்சூர் - நெமிலிச்சேரி 400 அடி சாலையில் நேற்றுமுன்தினம் இரவு மீஞ்சூர் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆந்திரா நோக்கி வேகமாக சென்ற இரண்டு கார்களை வழிமடக்கி சோதனை செய்தனர். அதில், 10 மூட்டைகளில் கடல் பூச்சிகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் (32), கோதப்பட்டணத்தைச் சேர்ந்த சாய்பாபா (33) ஆகியோர் என்பதும், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி கடற்கரை பகுதியில் பிடிக்கப்பட்ட கடல் பூச்சிகளை ஆந்திராவுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது. பெரிய மீன்களை பிடிக்க இந்த கடல் பூச்சிகளை பயன்படுத்துவார்களாம். இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.