பிரதமர் மோடி வருகை சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை: அரை கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். இதில் ஆவணங்களின்றி கொண்டு வந்த அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் சென்னை விமானநிலையத்திற்கு வருகிறார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு நாட்களாக போலீசார் பெரியமேடு, சென்ட்ரல் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் விழா நடைபெறும் சென்னை பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள நேரு விளையாட்டு அரங்கை சுற்றி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக பெரியமேட்டில் நேற்றிரவு நடந்த வாகன சோதனையில் சமூக விரோதிகள் போல் வேடமணிந்து கத்தியுடன் வந்த 2 போலீசாரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்தனர். மேலும், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றும் சான்ட் என்பவர் வாகன சோதனையின் போது சிக்கினார். அவரின் வாகனத்தை சோதனை செய்த போது அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரிடம் உரிய ஆவணங்களை காட்டி நகைகளை பெற்று செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: