பிரதமர் தமிழகம் வருகை நடிகை ஓவியா எதிர்ப்பு: டிவிட்டர் பதிவால் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப்பயணமாக இன்று சென்னை வருகிறார். காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு  திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார்.  இந்நிலையில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலர் டிவிட் செய்துள்ளனர். நடிகை ஓவியா நேற்று தனது டிவிட்டர்  பதிவில், ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக்கில் வெளியிட்டுள்ள பதிவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஓவியாவிடம் கேட்டபோது, ‘நான் நடிகையாக இருந்தாலும், இந்தியாவின் குடிமகள் என்ற முறையில், என் மனதுக்கு தோன்றியதை பதிவு செய்துள்ளேன். நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. இதுவரை எந்தக் கட்சியும் என்னை  அழைக்கவில்லை. ஒருவேளை எந்தக் கட்சியாவது என்னை அழைத்தால், அரசியலுக்கு வருவது பற்றி அப்போது யோசித்து முடிவு செய்வேன். இதுவரை எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் என் கருத்துகளை  சொல்லி வந்திருக்கிறேன். அதுபோலத்தான் இந்த பதிவும். தேர்தல் பிரசாரம் செய்யும்படி எந்தக் கட்சியும் எனக்கு பணம் கொடுக்கவும் இல்லை, அழைக்கவும் இல்லை’ என்றார்.

Related Stories: