சென்னை: சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக வேளச்சேரி முதல் தாம்பரம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகி வந்தது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் சோழிங்கநல்லூர், மாம்பாக்கம், பரங்கிமலை செல்லும் சாலை 3 சந்திப்புக்களை கொண்ட மேடவாகத்தில் 3 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி 3 சந்திப்புகளை மையப்படுத்தி மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் இருந்து ஜல்லடையான்பேட்டை சந்திப்பு வரை 2 கி.மீ மற்றும் தாம்பரம் - வேளச்சேரி சாலையில் ஜல்லடையான்பேட்டை சந்திப்பில் இருந்து 1 கி.மீ நீளத்தில் ஒரு பாலம் என 2 மேம்பாலம் அமைக்க 146 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பாலத்தில் ஒரு நேரத்தில் 3 கனரக வாகனங்கள் செல்ல முடியும். இந்த மேம்பாலம் கட்டுமான பணி கடந்த 2016ல் தொடங்கப்பட்டன. ஆனால், கட்டுமான பணியை எடுத்திருந்த ஒப்பந்த நிறுவனம் கடந்த 2018ல் பணிகளை நிறுத்தியது.