சேலம்: தமிழகத்தில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 561 யானைகள் உயிரிழந்துள்ளது. இத்தகவலை தமிழக வனத்துறை, வன உயிரின ஆர்வலர் ஆண்டனி ரூபினி என்பவர் கேட்ட தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கு பதிலாக தெரிவித்துள்ளது. கடந்த 2015ல் இருந்து 2020 செப்டம்பர் வரையில் கோவை வன மண்டலத்தில் 134 யானைகளும், ஈரோடு வன மண்டலத்தில் 167 யானைகளும், தர்மபுரி வன மண்டலத்தில் 89 யானைகளும் இறந்திருக்கிறது. இவற்றில் 161 யானை குட்டிகளும் அடக்கம். காட்டிற்குள் இருந்து உணவு தேடி வரும் யானைகளில், பெரும்பாலானவை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. சில யானைகள் மட்டும் வேட்டையாடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மசினகுடி பகுதியில் தனியார் தங்கும் விடுதி அருகே வந்த யானை மீது 2 பேர், டயரில் தீயை பற்ற வைத்து தூக்கி வீசியதும், அது யானையின் காது பகுதியில் மாட்டி எரிந்து, உயிரிழந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.