கட்டுமான பணியில் லிப்ட் அறுந்து இன்ஜினியர் பலி

ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 10 பிளாக்குகள் கொண்ட 420 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதனை சென்னையை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபடுகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த, தத்தலூர் கிராமத்தை சேர்ந்த வேதகிரி (26) என்பவர், கடந்த 2 ஆண்டுகளாக சைட் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை, கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல லிப்ட் அமைக்கும் பணியில்  வேதகிரி ஈடுபட்டார். அப்போது திடீரென லிப்ட் சரிந்து வேதகிரி மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்த தொழிலாளர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வேதகிரி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: