மக்களவையில் தனியார் துறையை பெருமைப்படுத்தி பேசிய பிரதமர் மோடி: இந்திய தொழிலதிபர்கள் வரவேற்பு.!!!

டெல்லி: மக்களவையில் தனியார் துறையை பிரதமர் மோடி பெருமைப்படுத்தி பேசியதற்கு இந்திய தொழிலதிபர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற அவைகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்கிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களவையில் பேசுகையில்,  நாட்டில் தனியார் துறைகளை அவமதிக்கும் போக்கு, கலாச்சாரம் தொடரந்து வருகிறது. நாட்டில் பொதுத்துறை எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதே அளவுக்கு தனியார் துறைக்குக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தனியார் துறையின் பங்களிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.

குறிப்பாக, தொலைத்தொடர்புத்துறையிலும், மருத்துவத்துறையிலும் தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றனர். ஏழை மக்கள் கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள், மொபைல் போன்கள் விலை கடும் போட்டி காரணமாக மக்கள் எளிதாக வாங்கும் வகையில் குறைந்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியாவால் மனிதநேய உதவிகளை பல நாடுகளுக்கும் செய்ய முடிகிறது என்றால், அதற்கு தனியார் துறை, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால்தான் முடிகிறது. எனவே, தனியார் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் அவமதிக்கும் கலாச்சாரம், போக்கை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

தனியார் துறைக்கு எதிராக நாம் நமது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் சிலரின் வாக்குகளை கடந்த காலத்தில் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த காலம் கடந்துவிட்டது என்றார். நமது இளைஞர்களையும் இவ்வாறு இழிவுபடுத்த முடியாது. மனித குலத்துக்கு இன்று இந்தியா ஏதேனும் வகையில் பயன்படும் என்றால் அதில் தனியார் துறைக்கே அதிக பங்கு என்று பேசியிருந்தார். இந்நிலையில், தனியார் துறை குறித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தி பேசியதற்கு இந்திய தொழிலதிபர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மகீந்திரா குழும சேர்மன் ஆனந்த் மஹீந்திரா கூறுகையில், தொற்று நோய் காலக்கட்டத்தில் பிரதமரின் வார்த்தைகள் ஊக்குவிப்பாய் அமைந்துள்ளன. நாம் இப்போது நிர்வாகம் மற்றும் செயலில் எதிர்பார்ப்புக்கு இணங்க செயல்பட வேண்டியது அவசியம் என்று பாராட்டியுள்ளார்.

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத் தலைவர் சாஜன் ஜிண்டால் கூறுகையில், இந்திய தொழிலதிபர்களுக்கு முதல் முறையாக ஒரு இந்தியப் பிரதமர் மரியாதை அளித்துப் பேசியுள்ளார். மேலும், பிரதமர் மோடி பேசியது நாட்டிற்கு செல்வத்தையும், வேலைவாய்ப்பையும் வழங்கிடும் தொழிலதிபர்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய உத்வேகமாகும் என்று பாராட்டிப் பேசியுள்ளார்.

Related Stories: